Monday, 13th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

4 மாவட்டங்களில் தயார் நிலையில் மாநில பேரிடர் மீட்புப் படை

நவம்பர் 12, 2022 02:28

சென்னை: சென்னை, காஞ்சிபுரம், கடலூர், நாகை மாவட்டங்களில் மீட்புப் பணியில் ஈடுபட மாநில பேரிடர் மீட்புப் படை தயார் நிலையில்உள்ளதாக டிஜிபி சைலேந்திர பாபு தெரிவித்துள்ளார். தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. மேலும், பல்வேறு மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, மீட்புப் பணிகளில் ஈடுபட, மாநில பேரிடர் மீட்புப் படை தயார் நிலையில் உள்ளது. 

இது தொடர்பாக டிஜிபி சைலேந்திரபாபு நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, மாநிலப் பேரிடர் மீட்புப் படையின் 4 குழுக்கள் சென்னை, காஞ்சிபுரம், கடலூர், நாகை மாவட்டங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன. சென்னையில் ஏற்படும் வெள்ள பாதிப்புகளின்போது, மீட்புப் பணியில் ஈடுபட தமிழக காவல் துறையைச் சேர்ந்த நீச்சல் வீரர்கள் மற்றும் தமிழக கடலோரப் பாதுகாப்புக் குழுமத்தைச் சேர்ந்த நீச்சல் வீரர்களை கொண்ட 30 பேர் அணி, மீட்புத் தளவாடங்களுடன் காவல் துறை தலைமையகத்தில் தயார் நிலையில் உள்ளது.

அதேபோல, மாநிலத்தின் பிற பகுதிகளில் வெள்ளப் பாதிப்பு ஏற்பட்டால் அதை எதிர்கொள்ளவும், மீட்புப் பணியில் ஈடுபடவும் தமிழக கடலோரக் காவல் படையின் கமாண்டோ பிரிவைச் சேர்ந்த 60 நீச்சல் வீரர்கள் தயார் நிலையில் உள்ளனர். கடலோர மாவட்டங்களில் மீனவ சமுதாயத்தைச் சேர்ந்த தன்னார்வலர்களும், மீட்புப் பணிக்காக படகுகளுடன் தயார் நிலையில் உள்ளனர்.மேலும், மழையால் பாதிக்கப்படும் மக்களுக்கு உதவவும், மீட்புப் பணியில் ஈடுபடவும் காவல் துறையினரை தயார்
நிலையில் வைக்கும்படி, அனைத்து மாநகர காவல் ஆணையர்கள், மாவட்ட கண்காணிப்பாளர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இவ்வாறு செய்திக்குறிப்பில் டிஜிபி தெரிவித்துள்ளார்.
 

தலைப்புச்செய்திகள்